பக்கம் எண் :

திருக்குறள்3அறம்

2. வான்சிறப்பு
 

11.

வானின் றுலகம் வழங்கி வருதலால்

தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

 

உலகத்தை  வாழ   வைப்பது  மழையாக  அமைந்திருப்பதால் அதுவே
அமிழ்தம் எனப்படுகிறது.
 

12.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

 

யாருக்கு   உணவுப்      பொருள்களை    விளைவித்துத்தர   மழை
பயன்படுகிறதோ,   அவர்களுக்கே   அந்த  மழை   அவர்கள் அருந்தும்
உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.
 

13.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின் றுடற்றும் பசி.

 

கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர்   பொய்த்துவிட்டால் பசியின்
கொடுமை வாட்டி வதைக்கும்.
 

14.

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.

 

மழை  என்னும்  வருவாய்  வளம்  குன்றிவிட்டால், உழவுத்  தொழில்
குன்றிவிடும்.
 

15.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

 

பெய்யாமல்   விடுத்து   உயிர்களின்  வாழ்வைக்  கெடுக்கக் கூடியதும்,
பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு  வளம்  சேர்ப்பதும்
மழையே ஆகும்.