பக்கம் எண் :

திருக்குறள்229இன்பம்

115. அலர் அறிவுறுத்தல்
 

1141.

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால்.

 

எம் காதலைப் பற்றிப்  பழிதூற்றிப்  பேசுவதால்  அதுவே  எம் காதல்
கைகூட  வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல்
இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்.
 

1142.

மலரன்ன கண்ணாள் அருமை அறியா

தலரெமக் கீந்ததிவ் வூர்.

 

அந்த  மலர்விழியாளின்  மாண்பினை  உணராமல் எம்மிடையே காதல்
என்று   இவ்வூரார்   பழித்துரைத்தது  மறைமுக   உதவியாகவே  எமக்கு
அமைந்தது.
 

1143.

உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

 

எமது  காதலைப்பற்றி  ஊரறியப்   பேச்சு  எழாதா?  அந்தப்  பேச்சு,
இன்னும்  எமக்குக்   கிட்டாத  காதல்  கிட்டியது  போன்று  இன்பத்தைத்
தரக்கூடியதாயிற்றே!
 

1144.

கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து.

 

ஊரார்  அலர்  தூற்றுவதால்  எம்  காதல்  வளர்கிறது;  இல்லையேல்
இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய்விடும்.
 

1145.

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது.

 

காதல்  வெளிப்பட  வெளிப்பட  இனிமையாக  இருப்பது  கள்ளுண்டு
மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்.