பக்கம் எண் :

களவியல்230கலைஞர் உரை

1146.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று.

 

காதலர்  சந்தித்துக் கொண்டது  ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப்
பாம்பு  விழுங்குவதாகக்  கற்பனையாகக்   கூறப்படும் "கிரகணம்"  எனும்
நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர்முழுவதும் அலராகப் பரவியது.
 

1147.

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளுமிந் நோய்.

 

ஒருவரையொருவர்  விரும்பி  மலர்ந்த  காதலானது ஊர்மக்கள் பேசும்
பழிச்சொற்களை  எருவாகவும்  அன்னையின்  கடுஞ்சொற்களை  நீராகவும்
கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.
 

1148.

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்

காமம் நுதுப்பேம் எனல்.

 

ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது,
எரிகின்ற  தீயை நெய்யை  ஊற்றி  அணைப்பதற்கு  முயற்சி  செய்வதைப்
போன்றதாகும்.
 

1149.

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்

பலர்நாண நீத்தக் கடை.

 

உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம்  என்று உறுதியளித்தவர்
பலரும்  நாணும்படியாக  என்னை  விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது
நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?.
 

1150.

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

கௌவை எடுக்குமிவ் வூர்.

 

யாம்  விரும்புகின்றவாறு   ஊரார்  அலர்  தூற்றுகின்றனர்;  காதலரும்
விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்.