பக்கம் எண் :

திருக்குறள்231இன்பம்

116. பிரிவு ஆற்றாமை
 

1151.

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை.

 

பிரிந்து   செல்வதில்லையென்றால்  அந்த   மகிழ்ச்சியான  செய்தியை
என்னிடம்  சொல்.  நீ  போய்த்தான்  தீர  வேண்டுமென்றால்  நீ திரும்பி
வரும்போது  யார்  உயிரோடு  இருப்பார்களோ  அவர்களிடம்  இப்போது
விடைபெற்றுக் கொள்.
 

1152.

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு.

 

முன்பெல்லாம்  அவரைக்  கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக
இருந்தது; ஆனால், இப்போது உடல்தழுவிக்  களிக்கும்போதுகூடப் பிரிவை
எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!
 

1153.

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவோ ரிடத்துண்மை யான்.

 

பிரிவுத்  துன்பத்தை  அறிந்துள்ள  காதலரும் நம்மைப் பிரிந்து செல்ல
நேரிடுவதால்;  "பிரிந்திடேன்"  என  அவர்  கூறுவதை  உறுதி  செய்திட
இயலாது.
 

1154.

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

தேறியார்க் குண்டோ தவறு.

 

பிரிந்திடேன்;  அஞ்சாதே  எனச்   சொல்லியவர்   எனைப்   பிரிந்து
செல்வாரானால்,  அவர்  சொன்னதை   நம்பியதில்  என்ன  குற்றமிருக்க
முடியும்?
 

1155.

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு.

 

காதலர்  பிரிந்து  சென்றால்  மீண்டும்  கூடுதல்  எளிதல்ல என்பதால்,
அவர் பிரிந்து செல்லாமல் முதலிலேயே காத்துக் கொள்ள வேண்டும்.