பக்கம் எண் :

களவியல்234கலைஞர் உரை

1166.

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது.

 

காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ,
கடலைவிடப் பெரியது.
 

1167.

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்

யாமத்தும் யானே உளேன்.

 

நள்ளிரவிலும்  என்   துணையின்றி   நான்  மட்டுமே   இருக்கிறேன்;
அதனால்,  காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண
இயலாமல் கலங்குகிறேன்.
 

1168.

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா

என்னல்ல தில்லை துணை.

 

'இரவே!   உலகில்   உள்ள   எல்லா  உயிர்களையும்   நீ   உறங்கச்
செய்துவிட்டுப் பாவம்  இப்போது  என்னைத்தவிர வேறு துணையில்லாமல்
இருக்கிறாய்.'
 

1169.

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்

நெடிய கழியும் இரா.

 

இந்த  இரவுகள் நீண்டுகொண்டே  போவதுபோல் தோன்றும் கொடுமை
இருக்கிறதே   அது  காதலரின்  பிரிவால்  ஏற்படும்   கொடுமையைவிடப்
பெரிதாக உள்ளது.
 

1170.

உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

நீந்தல மன்னோவென் கண்.

 

காதலர்   இருக்குமிடத்துக்கு  என்   நெஞ்சத்தைப்   போலச்  செல்ல
முடியுமானால்,  என்   கருவிழிகள், அவரைக்   காண்பதற்குக்   கண்ணீர்
வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.