பக்கம் எண் :

திருக்குறள்235இன்பம்

118. கண் விதுப்பழிதல்
 

1171.

கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்

தாங்காட்ட யாங்கண் டது.

 

கண்கள்  செய்த  குற்றத்தால்தானே  காதல் நோய்  ஏற்பட்டது? அதே
கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?
 

1172.

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்

பைதல் உழப்ப தெவன்.

 

விளைவுகளை   உணராமல்  மயங்கி  நோக்கிய  மைவிழிகள்,  இன்று,
காதலரைப்  பிரிந்ததால்  துன்பமுறுவது  தம்மால்  தான்  என அறியாமல்
தவிப்பது ஏன்?
 

1173.

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்க துடைத்து.

 

தாமாகவே  பாய்ந்து  சென்று  அவரைப்  பார்த்து  மகிழ்ந்த கண்கள்,
இன்று தாமாகவே அழுகின்றன. இது நகைக்கத் தக்க ஒன்றாகும்.
 

1174.

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா

உய்வில்நோய் என்கண் நிறுத்து.

 

தப்பிப் பிழைக்க முடியாத தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக்
காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன.
 

1175.

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்

காமநோய் செய்தவென் கண்.

 

கடல்  கொள்ளாத  அளவுக்குக் காதல்  நோய்  உருவாகக் காரணமாக
இருந்த   என்   கண்கள்,   இப்போது   தூங்க  முடியாமல்  துன்பத்தால்
வாடுகின்றன.