பக்கம் எண் :

பாயிரம்4கலைஞர் உரை

16.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண் பரிது.

 

விண்ணிலிருந்து  மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை
காண்பது அரிதான ஒன்றாகும்.
 

17.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.

 

ஆவியான   கடல்நீர்  மேகமாகி    அந்தக்    கடலில்   மழையாகப்
பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும்.  மனித   சமுதாயத்திலிருந்து
புகழுடன்  உயர்ந்தவர்களும் அந்தச்  சமுதாயத்திற்கே  பயன்பட்டால்தான்
அந்தச் சமுதாயம் வாழும்.
 

18.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

 

வானமே   பொய்த்து  விடும்போது, அதன் பின்னர்  அந்த வானத்தில்
வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு   விழாக்கள்   ஏது? வழிபாடுதான்
ஏது?
 

19.

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்

வானம் வழங்கா தெனின்.

 

இப்பேருலகில்  மழை   பொய்த்துவிடுமானால்  அது, பிறர் பொருட்டுச்
செய்யும்   தானத்திற்கும்,  தன்பொருட்டு   மேற்கொள்ளும்  நோன்புக்கும்
தடங்கலாகும்.
 

20.

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு.

 

உலகில்  மழையே  இல்லையென்றால்  ஒழுக்கமே  கெடக்கூடும் என்ற
நிலை  இருப்பதால்,   நீரின்   இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட
வேண்டும்.