1226. | மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத |
| காலை அறிந்த திலேன். |
|
மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை. |
1227. | காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி |
| மாலை மலருமிந் நோய். |
|
காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும். |
1228. | அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் |
| குழல்போலும் கொல்லும் படை. |
|
காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது. |
1229. | பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு |
| மாலை படர்தரும் போழ்து. |
|
என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது. |
1230. | பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை |
| மாயுமென் மாயா உயிர். |
|
பொருள் ஈட்டுவதற்குச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது. |