பக்கம் எண் :

திருக்குறள்247இன்பம்

124. உறுப்புநலன் அறிதல்
 

1231.

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி

நறுமலர் நாணின கண்.

 

பிரிவுத்   துன்பத்தை    நமக்களித்துவிட்டு   நெடுந்தொலைவு சென்று
விட்டாரேயென்று  வருந்திடும்   காதலியின்   கண்கள்  அழகிழந்துபோய்,
மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.
 

1232.

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்

பசந்து பனிவாரும் கண்.

 

பசலை நிறம் கொண்டு  நீர்  பொழியும்  கண்கள்,  விரும்பிய  காதலர்
அன்பு காட்டவில்லை யென்பதைச் சொல்லிக் காட்டுகின்றன.
 

1233.

தணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள்.

 

தழுவிக்   கிடந்த   போது   பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து
காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.
 

1234.

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்

தொல்கவின் வாடிய தோள்.

 

பருத்திருந்த  பருவத்  தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன்
வளையல்களும்    சுழன்று  விழுகின்றன, காதலனைப் பிரிந்து வாடுவதன்
காரணமாக.
 

1235.

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்கவின் வாடிய தோள்.

 

வளையல்களும்   கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள்
என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.