பக்கம் எண் :

திருக்குறள்251இன்பம்

126. நிறையழிதல்
 

1251.

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

 

காதல்   வேட்கை   இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம்
எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட    மனஅடக்கம்    என்கிற    கதவையே
உடைத்தெறிந்து விடுகின்றது.
 

1252.

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை

யாமத்தும் ஆளும் தொழில்.

 

காதல்   வேட்கை  எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில்
அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது.
 

1253.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்

தும்மல்போல் தோன்றி விடும்.

 

எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும்
மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான்  காதல்  உணர்ச்சியும்;
என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.
 

1254.

நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்

மறையிறந்து மன்று படும்.

 

மன  உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என்
காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே  வெளிப்பட்டு
விடுகிறதே.
 

1255.

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்

உற்றார் அறிவதொன் றன்று.

 

தம்மைப்  பிரிந்து   சென்ற   காதலரைப்  பகையாகக் கருதி அவரைத்
தொடர்ந்து    செல்லாத     மன   அடக்கம்,   காதல்  நோயுற்றவர்க்கு
இருப்பதில்லை.