பக்கம் எண் :

கற்பியல்252கலைஞர் உரை

1256.

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ

எற்றென்னை உற்ற துயர்.

 

வெறுத்துப்  பிரிந்ததையும்   பொறுத்துக்   கொண்டு   அவர் பின்னே
செல்லும் நிலையை   என்   நெஞ்சுக்கு   ஏற்படுத்திய  காதல்   நோயின்
தன்மைதான் என்னே.
 

1257.

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்

பேணியார் பெட்ப செயின்.

 

நமது     அன்புக்குரியவர்      நம்மீது   கொண்ட காதலால் நமக்கு
விருப்பமானவற்றைச் செய்யும்போது,  நாணம்   எனும்    ஒரு     பண்பு
இருப்பதையே நாம் அறிவதில்லை.
 

1258.

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்

பெண்மை உடைக்கும் படை.

 

நம்முடைய    பெண்மை  எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக
இருப்பது,  பல   மாயங்களில்   வல்ல    கள்வராம் காதலரின் பணிவான
பாகுமொழியன்றோ?
 

1259.

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்

கலத்தல் உறுவது கண்டு.

 

ஊடல்   கொண்டு   பிணங்குவோம்  என  நினைத்துதான் சென்றேன்;
ஆனால் என்    நெஞ்சம்   என்னை     விடுத்து அவருடன் கூடுவதைக்
கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.
 

1260.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ

புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

 

நெருப்பிலிட்ட   கொழுப்பைப்     போல்      உருகிடும்   நெஞ்சம்
உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில்     உறுதியாக
இருக்க முடியுமா?.