பக்கம் எண் :

திருக்குறள்253இன்பம்

127. அவர்வயின் விதும்பல்
 

1261.

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல்.

 

வருவார் வருவார் என   வழி   பார்த்துப்    பார்த்து     விழிகளும்
ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள   நாட்களைச்    சுவரில்    குறியிட்டு
அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.
 

1262.

இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்

கலங்கழியும் காரிகை நீத்து.

 

காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை
மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு  நீங்கி  மெலிந்து போய்
வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.
 

1263.

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்

வரல்நசைஇ இன்னும் உளேன்.

 

ஊக்கத்தையே    உறுதுணையாகக்   கொண்டு   வெற்றியை விரும்பிச்
சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான்  உயிரோடு
இருக்கிறேன்.
 

1264.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்

கோடுகொ டேறுமென் நெஞ்சு.

 

காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது  வருவார்
என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.
 

1265.

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்

நீங்குமென் மென்தோள் பசப்பு.

 

கண்ணார  என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய
தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.