பக்கம் எண் :

கற்பியல்254கலைஞர் உரை

1266.

வருகமன் கொண்கன் ஒருநாட் பருகுவன்

பைதல்நோய் எல்லாம் கெட.

 

என்னை    வாடவிட்டுப்    பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான்
ஆகவேண்டும். வந்தால் என்  துன்பம்    முழுவதும்  தீர்ந்திட அவனிடம்
இன்பம் துய்ப்பேன்.
 

1267.

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்

கண்ணன்ன கேளிர் வரின்.

 

கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த   துயரின்
காரணமாக அவருடன் ஊடல் கொள்வேனோ? அல்லது    கட்டித் தழுவிக்
கொள்வேனோ? அல்லது ஊடுதல்    கூடுதல்    ஆகிய    இரண்டையும்
இணைத்துச்    செய்வேனோ?   ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த
இன்பத்தை நினைக்கும்போது.
 

1268.

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து

மாலை அயர்கம் விருந்து.

 

தலைவன், தான் மேற்கொண்டுள்ள  செயலில்  வெற்றி   பெறுவானாக;
அவன்   வென்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப
விருந்துதான்.
 

1269.

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.

 

நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும்  நாளை  எதிர்பார்த்து
ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்.
 

1270.

பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்

உள்ளம் உடைந்துக்கக் கால்.

 

துன்பத்தைத்    தாங்கிக்   கொள்ள  முடியாமல்  மனம் நிலையிழந்து
போய்விடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச்   சந்திப்பதனாலோ,
சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்?.