பக்கம் எண் :

திருக்குறள்255இன்பம்

128. குறிப்பறிவுறுத்தல்
 

1271.

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்

உரைக்கல் உறுவதொன் றுண்டு.

 

வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து
விழிகள் சொல்லக்கூடிய செய்தி   ஒன்று   உண்டு;   அதுதான்   பிரிவை
விரும்பாத காதல்.
 

1272.

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்

பெண்நிறைந்த நீர்மை பெரிது.

 

கண்நிறைந்த அழகும்   மூங்கில்   போன்ற   தோளும் கொண்ட என்
காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.
 

1273.

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன் றுண்டு.

 

மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல  இந்த  மடந்தையின்
அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.
 

1274.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

 

மலராத  அரும்புக்குள்  நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு
பெண்ணின் புன்னகையென்ற   அரும்புக்குள்  அவளது காதலனைப்பற்றிய
நினைவும் நிரம்பியிருக்கிறது.
 

1275.

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்

தீர்க்கும் மருந்தொன் றுடைத்து.

 

வண்ணமிகு    வளையல்கள்    அணிந்த   என்       வடிவழகியின்
குறும்புத்தனமான  பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும்  துன்பத்தைத்
தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.