பக்கம் எண் :

திருக்குறள்259இன்பம்

130. நெஞ்சொடு புலத்தல்
 

1291.

அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே

நீயெமக் காகா தது.

 

நெஞ்சே! நம்மை   நினைக்காமல்  இருப்பதற்கு   அவருடைய நெஞ்சு
அவருக்குத்    துணையாக   இருக்கும்   போது  நீ எமக்குத் துணையாக
இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?
 

1292.

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்

செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

 

நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக்   கண்ட  பிறகும்,
நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.
 

1293.

கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ

பெட்டாங் கவர்பின் செலல்.

 

நெஞ்சே! நீ  எனை  விடுத்து  அவரை   விரும்பிப்  பின் தொடர்ந்து
செல்வது,     துன்பத்தால்    அழிந்தோர்க்கு  நண்பர்கள்  துணையிருக்க
மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?
 

1294.

இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே

துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

 

நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன்   பயனைக்    கூடலில்
நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார்
பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.
 

1295.

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரி வஞ்சும்

அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

 

என்   நெஞ்சத்துக்குத்  துன்பம்  தொடர்   கதையாகவே  இருக்கிறது.
காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்;   அவர்  வந்து  விட்டாலோ
பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.