பக்கம் எண் :

திருக்குறள்261இன்பம்

131. புலவி
 

1301.

புல்லா திராஅப் புலத்தை அவருறும்

அல்லல்நோய் காண்கம் சிறிது.

 

ஊடல்   கொள்வதால்  அவர்  துன்ப  நோயினால் துடிப்பதைச் சிறிது
நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.
 

1302.

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்.

 

ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு
போல்   ஓரளவுடன்   இருக்க  வேண்டும். அந்தக் கால அளவு நீடித்தால்
உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்.
 

1303.

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்

புலந்தாரைப் புல்லா விடல்.

 

ஊடல் கொண்டவரின் ஊடல்  நீக்கித்  தழுவாமல்   விடுதல்  என்பது,
ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு  ஆளாக்கி
வருத்துவதாகும்.
 

1304.

ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரிந் தற்று.

 

ஊடல்புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு  செலுத்திடாமல்  விலகியே
இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை  அதன்  அடிப்பாகத்தில்
அறுப்பது போன்றதாகும்.
 

1305.

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை

பூவன்ன கண்ணார் அகத்து.

 

மலர்  விழி  மகளிர்  நெஞ்சில்  விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல
காதலர்க்கு அழகு சேர்க்கும்.