பக்கம் எண் :

கற்பியல்266கலைஞர் உரை

1326.

உணலினும் உண்ட தறலினிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது.

 

உணவு  அருந்துவதைவிட,  அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம்.
அதைப்போல்   உடலுறவைவிட  ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு
சுகம்.
 

1327.

ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலிற் காணப் படும்.

 

ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார்.
இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும்போது உணரப்படும்.
 

1328.

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்

கூடலில் தோன்றிய உப்பு.

 

நெற்றியில்   வியர்வை   அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை,
மீண்டும்    ஒருமுறை    ஊடல்   தோன்றினால்,   அதன்   வாயிலாகப்
பெறமுடியுமல்லவா?
 

1329.

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

நீடுக மன்னோ இரா.

 

ஒளி   முகத்தழகி    ஊடல்   புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும்
பொருட்டு   நான்   அவளிடம்  இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கு
இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.
 

1330.

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்.

 

ஒருவருக்கொருவர்    செல்லமாகச்    சினங்கொண்டு   பிரிந்திருப்பது
எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப்
பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.