பக்கம் எண் :

திருக்குறள்7அறம்

4.அறன் வலியுறுத்தல்
 

31.

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.

 

சிறப்பையும்,  செழிப்பையும்   தரக்கூடிய    அறவழி   ஒன்றைத்தவிர
ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?
 

32.

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

 

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய
வாழ்க்கைக்கு  ஆக்கம்  தரக்   கூடியது   எதுவுமில்லை; அந்த அறத்தை
மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.
 

33.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

 

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும்
தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
 

34.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.

 

மனம்  தூய்மையாக  இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர
வேறொன்றுமில்லை.
 

35.

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்ற தறம்.

 

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல்  ஆகிய
இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.