பக்கம் எண் :

பாயிரம்8கலைஞர் உரை

36.

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

 

பிறகு  பார்த்துக்கொள்ளலாம்   என்று  நாள்  கடத்தாமல் அறவழியை
மேற்கொண்டால்   அது   ஒருவர்   இறந்தபின்  கூட  அழியாப் புகழாய்
நிலைத்துத் துணை நிற்கும்.
 

37.

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோ டூர்ந்தான் இடை.

 

அறவழியில் நடப்பவர்கள்  பல்லக்கில்  உட்கார்ந்து   செல்பவர்களைப்
போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும்   எளியவாகக்
கருதி  மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை
ஆட்படுத்திக்  கொண்டவர்களோ  பல்லக்கைத்  தூக்கிச் சுமப்பவர்களைப்
போல   இன்பத்திலும்   அமைதி  கொள்ளாமல்,  துன்பத்தையும் தாங்கிக்
கொள்ளும்    மனப்பக்குவமின்றி    வாழ்வையே    பெரும்  சுமையாகக்
கருதுவார்கள்.
 

38.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.

 

பயனற்றதாக   ஒருநாள்கூடக்   கழிந்து   போகாமல்,     தொடர்ந்து
நற்செயல்களில்  ஈடுபடுபவருக்கு    வாழ்க்கைப்   பாதையைச்    சீராக்கி
அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.
 

39.

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்

புறத்த புகழும் இல.

 

தூய்மையான   நெஞ்சுடன்  நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற
புகழால்  ஏற்படுவதே   இன்பமாகும். அதற்கு மாறான வழியில்   வருவது
புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.
 

40.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.

 

பழிக்கத்   தக்கவைகளைச்   செய்யாமல்   பாராட்டத்தக்க   அறவழிச்
செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.