பக்கம் எண் :

திருக்குறள்9அறம்

5. இல்வாழ்க்கை
 

41.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.

 

பெற்றோர், வாழ்க்கைத்   துணை,   குழந்தைகள்   என  இயற்கையாக
அமைந்திடும்  மூவர்க்கும்  துணையாக   இருப்பது இல்லறம் நடத்துவோர்
கடமையாகும்.
 

42.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

 

பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும்,  பாதுகாப்பற்றவர்க்கும்
இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.
 

43.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தா றோம்பல் தலை.

 

வாழ்ந்து  மறைந்தோரை  நினைவுகூர்தல், வாழ்வாங்கு  வாழ்வோரைப்
போற்றுதல்,    விருந்தோம்பல்,   சுற்றம்  பேணல்   ஆகிய கடமைகளை
நிறைவேற்றத் தன்னை    நிலைப்படுத்திக்   கொள்ளல் எனப்படும் ஐவகை
அறநெறிகளும் இல்வாழ்வுக் குரியனவாம்.
 

44.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

 

பழிக்கு  அஞ்சாமல்   சேர்ந்த  பொருள்  கணக்கின்றி    இருப்பினும்
அதைவிட, பழிக்கு  அஞ்சிச்   சேர்த்தபொருளைப்   பகுத்து   உண்ணும்
பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.
 

45.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

 

இல்வாழ்க்கை   பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு
அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.