பக்கம் எண் :

திருக்குறள்11அறம்

6. வாழ்க்கைத் துணைநலம்
 

51.

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

 

இல்லறத்திற்குரிய   பண்புகளுடன்,  பொருள்  வளத்துக்குத்  தக்கவாறு
குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.
 

52.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்.

 

நற்பண்புள்ள   மனைவி   அமையாத    இல்வாழ்க்கை    எவ்வளவு
சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.
 

53.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை.

 

நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.
அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.
 

54.

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்.

 

கற்பென்னும்  திண்மை    கொண்ட  பெண்மையின் உறுதிப் பண்பைப்
பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?
 

55.

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.

 

கணவன்   வாக்கினைக்  கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி
அவனையே  தொழுதிடும்  மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி
நடுங்கிப்  பெய்கின்ற  மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக்
கொள்பவளாவாள்.