பக்கம் எண் :

திருக்குறள்13அறம்

7. மக்கட்பேறு
 

61.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற.

 

அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு
வேறு எதுவுமில்லை.
 

62.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.

 

பெற்றெடுக்கும்   மக்கள்   பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின்,
ஏழேழு  தலைமுறை எனும் அளவுக்குக்  காலமெல்லாம்  எந்தத் தீமையும்
தீண்டாது.
 

63.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தந்தம் வினையான் வரும்.

 

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின்  பொருள்கள்
அவரவர் செயல்களின் விளைவாக வரக் கூடியவை.
 

64.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.

 

சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்  கூடத் தம்முடைய
குழந்தைகளின்     பிஞ்சுக்கரத்தால்    அளாவப்பட்ட    கூழ்    அந்த
அமிழ்தத்தைவிடச் சுவையான தாகிவிடுகிறது.
 

65.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

 

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக்
குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.