பக்கம் எண் :

இல்லறவியல்14கலைஞர் உரை

66.

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

 

தங்கள்   குழந்தைகளின்   மழலைச்  சொல்லைக் கேட்காதவர்கள்தான்
குழலோசை,  யாழோசை   ஆகிய   இரண்டும்  இனிமையானவை  என்று
கூறுவார்கள்.
 

67.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.

 

தந்தை  தன்  மக்களுக்குச்  செய்யவேண்டிய   நல்லுதவி  அவர்களை
அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.
 

68.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

 

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள்  அறிவிற்  சிறந்து  விளங்கினால்,
அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும்  அனைவருக்கும்  அக
மகிழ்ச்சி தருவதாகும்.
 

69.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

 

நல்ல  மகனைக்  பெற்றெடுத்தவள்  என்று ஊரார் பாராட்டும் பொழுது
அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட  அதிக  மகிழ்ச்சியை
அந்தத் தாய் அடைவாள்.
 

70.

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல்.

 

"ஆகா!   இவனைப்   பிள்ளையாகப்  பெற்றது  இவன் தந்தை பெற்ற
பெரும்பேறு",   என்று ஒரு மகன் புகழப் படுவதுதான், அவன் தன்னுடைய
தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும்.