பக்கம் எண் :

திருக்குறள்15அறம்

8. அன்புடைமை
 

71.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

 

உள்ளத்தில் இருக்கும்  அன்பைத்   தாழ்ப்பாள்   போட்டு  அடைத்து
வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து,  கண்ணீர்த்துளி
வாயிலாக அது வெளிப்பட்டு விடும்.
 

72.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

 

அன்பு  இல்லாதவர்,  எல்லாம்  தமக்கே என உரிமை கொண்டாடுவர்;
அன்பு  உடையவரோ  தம்  உடல்,  பொருள்,  ஆவி ஆகிய அனைத்தும்
பிறருக்கென எண்ணிடுவர்.
 

73.

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போ டியைந்த தொடர்பு.

 

உயிரும்  உடலும்போல்  அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த
பொருத்தமாகும்.
 

74.

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு.

 

அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம்,  நட்பு
எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
 

75.

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.

 

உலகில்  இன்புற்று    வாழ்கின்றவர்க்கு    வாய்க்கும்  சிறப்பு, அவர்
அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.