பக்கம் எண் :

திருக்குறள்17அறம்

9. விருந்தோம்பல்
 

81.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

 

இல்லறத்தைப் போற்றி வாழ்வது,  விருந்தினரை  வரவேற்று,  அவர்க்கு
வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
 

82.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. 

 

விருந்தினராக  வந்தவரை  வெளியே  விட்டுவிட்டுச்  சாகாத மருந்தாக
இருந்தாலும்  அதனைத்   தான்   மட்டும்   உண்பது   விரும்பத்   தக்க
பண்பாடல்ல.
 

83.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.

 

விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின்  வாழ்க்கை, அதன்
காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
 

84.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந் தோம்புவான் இல்.

 

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால்  காட்டி  விருந்தினரை  வரவேற்பவர்
வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
 

85.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.

 

விருந்தினர்க்கு  முதலில்   உணவளித்து   மிஞ்சியதை உண்டு வாழும்
பண்பாளன்,   தன்  நிலத்திற்குரிய  விதையைக்கூட  விருந்தோம்பலுக்குப்
பயன்படுத்தாமல் இருப்பானா?