வாயுறையாம் வள்ளுவன்தரு முப்பால் வாய்ப்பினும் |
தொல்லறநூல் உரைகண்ட பதின்மர் தாமும் |
தத்தமது சமயமத வண்ணம் குழைந்திடவும் |
ஆத்திகஞ்சார் வடமொழி விரவிடவுஞ் செய்ததால் |
குறள்நெறித் தனித்தகவு புலப்படுத்தா ரல்லர். |
இருபதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி விளைவால் |
உரைகண்ட இணையிலாப் புலவரோ பலப்பலர்! |
அவர்தம் பெயர்களோ விரிக்கினும் எஞ்சும்! |
ஆய்வுசெய் நோக்கில் வரைந்தவர் சிலரெனினும் |
புதிய சிந்தையைத் தூண்டுவ உண்டெனினும் |
படிந்தபழமைச் சார்பைத் துடைத்திட ஒல்லாததும் |
துடைத்திடத் தலைப்படின் ஏற்புடைத்தா காததுமாய் |
வள்ளுவர் திருவுரு வரைவார்கற்பனை யானதுபோல் |
வள்ளுவச் சிந்தனையும் கொண்டவர் 'காட்சி' யானது, |
எவ்வெவர் உரைதனைப் பயில்வோ ராயினும் |
அவ்வுரை மெய்ப்பொருள் தேரும் ஆர்வத்தில் |
பொய்யா மொழிதனைப் பகுத்தறிந் திடலால் |
மெய்மை காணுந்திறனு முயர்ந்தது நாளும்! |
திருக்குறள் வகுத்திட்ட வாழ்க்கை நெறியொன்றே |
திருவிடத்தின் பண்பாட்டு ஊற்றுக்கண் ஆகலின் |
திருமறை உரைபொருள் எவரும் எளிதுணர |
திருக்குறள் கருத்துரை வரையலானார் கலைஞர். |
குறட்பா மொழிந்திடும் பொருளொன்றே எனினும் |
குறள்பொருள் தெளிவார் உணர்திறன் வேறாகலின் |
குறட்பா சொற்றொடர் புணர்வகை யாலன்றிக் |
குறள்நெறி உளத்தூன்ற உரைதந்தார் கலைஞர். |