பக்கம் எண் :

திருக்குறள்19அறம்

10. இனியவை கூறல்
 

91.

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

 

ஒருவர்   வாயிலிருந்து   வரும்  சொல்   அன்பு      கலந்ததாகவும்,
வஞ்சனையற்றதாகவும்,  வாய்மையுடையதாகவும்    இருப்பின்     அதுவே
இன்சொல் எனப்படும்.
 

92.

அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.

 

முகம்   மலர்ந்து   இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக்
கொடுப்பதை விட மேலான பண்பாகும்.

93.

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.

 

முகம்  மலர   நோக்கி, அகம்   மலர  இனிய சொற்களைக் கூறுவதே
அறவழியில் அமைந்த பண்பாகும்.
 

94.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

 

இன்சொல்   பேசி    எல்லோரிடத்திலும்   கனிவுடன்  பழகுவோர்க்கு
'நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை.
 

95.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற

 

அடக்கமான   பண்பும்,   இனிமையாகப்   பேசும்  இயல்பும்  தவிர,
ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.