பக்கம் எண் :

இல்லறவியல்20கலைஞர் உரை

96.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.

 

தீய செயல்களை  அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால்,
இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.
 

97.

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்.

 

நன்மையான  பயனைத்  தரக்கூடிய  நல்ல   பண்பிலிருந்து   விலகாத
சொற்கள்  அவற்றைக்    கூறுவோருக்கும்  இன்பத்தையும், நன்மையையும்
உண்டாக்கக் கூடியவைகளாகும்.
 

98.

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இன்மையும் இன்பம் தரும்.

 

சிறுமைத்தனமற்ற  இனியசொல்  ஒருவனுக்கு  அவன் வாழும் போதும்,
வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.
 

99.

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது.

 

இனிய  சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு
மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?
 

100.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

 

இனிமையான    சொற்கள்    இருக்கும்போது   அவற்றை   விடுத்துக்
கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக்   காய்களைப்   பறித்துத்
தின்பதற்குச் சமமாகும்.