பக்கம் எண் :

திருக்குறள்21அறம்

11. செய்ந்நன்றியறிதல்
 

101.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.

 

"வாராது  வந்த  மாமணி"  என்பதுபோல்,  "செய்யாமற் செய்த உதவி"
என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த  வானமும்
பூமியும் கூட ஈடாக மாட்டா.
 

102.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

 

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும்,
அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.
 

103.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது.

 

என்ன  பயன்  கிடைக்கும்  என்று  எண்ணிப் பார்க்காமலே, அன்பின்
காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.
 

104.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார். 

 

ஒருவர்  செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும்
நன்றியுள்ளவர்  பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக்
கருதுவார்.
 

105.

உதவி வரைத்தன் றுதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.

 

உதவி      என்பது,     செய்யப்படும்    அளவைப்     பொறுத்துச்
சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப்  பொறுத்தே
அதன் அளவு மதிப்பிடப்படும்.