பக்கம் எண் :

திருக்குறள்23அறம்

12. நடுவு நிலைமை
 

111.

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்

பாற்பட் டொழுகப் பெறின்.

 

பகைவர், அயலோர்,  நண்பர்  எனப்  பகுத்துப்  பார்த்து  ஒருதலைச்
சார்பாக  நிற்காமல்  இருத்தலே நன்மை தரக் கூடிய நடுவுநிலைமை எனும்
தகுதியாகும்.
 

112.

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப் புடைத்து.

 

நடுவுநிலையாளனின்  செல்வத்திற்கு   அழிவில்லை;  அது,  வழிவழித்
தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.
 

113.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல்.

 

நடுவுநிலை  தவறுவதால்   ஏற்படக்கூடிய   பயன் நன்மையையே தரக்
கூடியதாக   இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான்
கடைப்பிடிக்க வேண்டும்.
 

114.

தக்கார் தகவிலர் என்ப தவரவர்

எச்சத்தாற் காணப் படும்.

 

ஒருவர்  நேர்மையானவரா  அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா
என்பது  அவருக்குப்  பின்  எஞ்சி  நிற்கப்  போகும்  புகழ்ச் சொல்லைக்
கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.
 

115.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி.

 

ஒருவர்க்கு    வாழ்வும்,   தாழ்வும்   உலக  இயற்கை;  அந்த   இரு
நிலைமையிலும்  நடுவுநிலையாக  இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு
அழகாகும்.