பக்கம் எண் :

திருக்குறள்27அறம்

14. ஒழுக்கம் உடைமை
 

131.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

 

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே
உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.
 

132.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை.

 

எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே   சிறந்த
துணை   என்பதால்,  எத்தகைய  துன்பத்தை  ஏற்றாவது  அதைக்  காக்க
வேண்டும்.
 

133.

ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.

 

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக்
காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாவராயினும்  அவர்கள்    இழிந்த
குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
 

134.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

 

பார்ப்பனன்   ஒருவன்   கற்றதை   மறந்துவிட்டால் மீண்டும் படித்துக்
கொள்ள     முடியும்;   ஆனால்,    பிறப்புக்குச்    சிறப்புச்   சேர்க்கும்
ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.
 

135.

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு.

 

பொறாமையுடையவனுக்கும்,   நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும்
வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.