பக்கம் எண் :

திருக்குறள்29அறம்

15. பிறனில் விழையாமை
 

141.

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்

தறம்பொருள் கண்டார்க ணில்.

 

பிறன்  மனைவியிடத்து    விருப்பம்   கொள்ளும் அறியாமை, உலகில்
அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து   உணர்ந்தவர்களிடம்
இல்லை.
 

142.

அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை

நின்றாரிற் பேதையா ரில்.

 

பிறன்   மனைவியை   அடைவதற்குத்   துணிந்தவர்கள்  அறவழியை
விடுத்துத்  தீயவழியில்   செல்லும்   கடைநிலை மனிதர்களைக் காட்டிலும்
கீழானவர்கள்.
 

143.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

தீமை புரிந்தொழுகு வார்.

 

நம்பிப்   பழகியவர்   வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில்
ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.
 

144.

எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல்.

 

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச்  சிந்தித்துப்  பாராமல்,
பிறன்     மனைவியிடம்      விருப்பம்     கொள்வது,    எத்துணைப்
பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.
 

145.

எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி.

 

எளிதாக   அடையலாம்   என  எண்ணிப்  பிறனுடைய மனைவியிடம்
முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.