166. | கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் |
| உண்பதூஉ மின்றிக் கெடும். |
|
உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமன்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும். |
167. | அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள் |
| தவ்வையைக் காட்டி விடும். |
|
செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள். |
168. | அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் |
| தீயுழி உய்த்து விடும். |
|
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீயவழியிலும் அவனை விட்டுவிடும். |
169. | அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் |
| கேடும் நினைக்கப் படும். |
|
பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும். |
170. | அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார் |
| பெருக்கத்தில் தீர்ந்தாரு மில். |
|
பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை. |