பக்கம் எண் :

இல்லறவியல்34கலைஞர் உரை

166.

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉ மின்றிக் கெடும்.

 

உதவியாக  ஒருவருக்குக்  கொடுக்கப்படுவதைப்  பார்த்துப்  பொறாமை
கொண்டால்  அந்தத்  தீய  குணம்,  அவனை  மட்டுமன்றி    அவனைச்
சார்ந்திருப்போரையும்    உணவுக்கும்,   உடைக்கும்கூட   வழியில்லாமல்
ஆக்கிவிடும்.
 

167.

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.

 

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி
என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு
அடையாளம் காட்டிவிட்டுத்  தங்கை  இலக்குமி  அவனைவிட்டு  அகன்று
விடுவாள்.
 

168.

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.

 

பொறாமை  எனும்  தீமை  ஒருவனுடைய  செல்வத்தையும்  சிதைத்துத்
தீயவழியிலும் அவனை விட்டுவிடும்.
 

169.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.

 

பொறாமைக்   குணம்  கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும்,
பொறாமைக்  குணம்  இல்லாதவனின்  வாழ்க்கை வேதனையாக இருப்பதும்
வியப்புக்குரிய செய்தியாகும்.
 

170.

அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.

 

பொறாமை   கொண்டதால்   புகழ்    பெற்று உயர்ந்தோரும் இல்லை;
பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.