பக்கம் எண் :

திருக்குறள்35அறம்

18. வெஃகாமை
 

171.

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

 

மனச்சான்றை   ஒதுக்கிவிட்டுப்    பிறர்க்குரிய    அரும் பொருளைக்
கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும்   வந்து
சேரும்.
 

172.

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்.

 

நடுவுநிலை  தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர்
தமக்கு ஒரு பயன் கிடைக்கும்   என்பதற்காகப்   பழிக்கப்படும்  செயலில்
ஈடுபடமாட்டார்.
 

173.

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்.

 

அறவழியில்   நிலையான   பயனை   விரும்புகிறவர்  உடனடிப் பயன்
கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.
 

174.

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்.

 

புலனடக்கம்  வாய்ந்த   தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப்
பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்பமாட்டார்.
 

175.

அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்.

 

யாராயிருப்பினும்  அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர
விரும்பினால்  ஒருவருக்குப்  பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான்
என்ன பயன்?