பக்கம் எண் :

இல்லறவியல்36கலைஞர் உரை

176.

அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும்.

 

அருளை   விரும்பி  அதனை  அடைவதற்கான  வழியில் செல்பவன்
தவறிப்போய்ப்  பிறர்   பொருளை   விரும்பிப்   பொல்லாத    செயலில்
ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்.
 

177.

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

மாண்டற் கரிதாம் பயன்.

 

பிறர்  பொருளைக்  கவர்ந்து  ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த
வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.
 

178.

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்.

 

தன்னுடைய   செல்வச்   செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால்
பிறருடைய       பொருளையும்    தானே   அடைய    வேண்டுமென்று
ஆசைப்படாமலிருக்க வேண்டும்.
 

179.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்

திறனறிந் தாங்கே திரு.

 

பிறர்    பொருளைக்    கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர்
பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.
 

180.

இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்

வேண்டாமை யென்னுஞ் செருக்கு.

 

விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக்  கவர்ந்துகொள்ள
விரும்பினால்  அழிவும்,   அத்தகைய   விருப்பம்    கொள்ளாதிருந்தால்
வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.