பக்கம் எண் :

திருக்குறள்37அறம்

19. புறங்கூறாமை
 

181.

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்

புறங்கூறா னென்றல் இனிது.

 

அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற
சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு
நல்லது.
 

182.

அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை.

 

ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப்  பேசிவிட்டு
அவர்   இல்லாத   இடத்தில்   அவரைப்  பற்றிப் பொல்லாங்கு பேசுவது
அறவழியைப்   புறக்கணித்து  விட்டு,  அதற்கு  மாறான   காரியங்களைச்
செய்வதைவிடக் கொடுமையானது.
 

183.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்

அறங்கூறும் ஆக்கந் தரும்.

 

கண்ட   இடத்தில்   ஒன்றும்,  காணாத   இடத்தில் வேறொன்றுமாகப்
புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதை விடச் சாவது நன்று.
 

184.

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க

முன்னின்று பின்னோக்காச் சொல்.

 

நேருக்கு    நேராக  ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும்
சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல்   நேரில்
இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.
 

185.

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

புன்மையாற் காணப் படும்.

 

ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக் கொண்டே
அவன்    அறவழி   நிற்பவன்  அல்லன்  என்பதை  எளிதில்  தெரிந்து
கொள்ளலாம்.