பக்கம் எண் :

திருக்குறள்39அறம்

20. பயனில சொல்லாமை
 

191.

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.

 

பலரும்   வெறுக்கும்படியான   பயனற்ற    சொற்களைப்  பேசுபவரை
எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.
 

192.

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கட் செய்தலிற் றீது.

 

பலர்முன்   பயனில்லாத  சொற்களைக்   கூறுவது, நட்புக்கு  மாறாகச்
செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.
 

193.

நயனில னென்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை.

 

பயனற்றவைகளைப்பற்றி  ஒருவன்  விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே
அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.
 

194.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லா ரகத்து.

 

பயனற்றதும்,   பண்பற்றதுமான   சொற்களைப்   பலர்முன்   பகர்தல்
மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.
 

195.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.

 

நல்ல  பண்புடையவர்  பயனில்லாத  சொற்களைக்     கூறுவாரானால்
அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.