பக்கம் எண் :

இல்லறவியல்40கலைஞர் உரை

196.

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்

மக்கட் பதடி யெனல்.

 

பயனற்றவைகளைச்   சொல்லிப்  பயன்பெற  நினைப்பவனை, மனிதன்
என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.
 

197.

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.

 

பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி   விடலாம்;
ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.
 

198.

அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்

பெரும்பய னில்லாத சொல்.

 

அரும்பயன்களை   ஆராய்ந்து  அறியக்கூடிய   ஆற்றல் படைத்தவர்,
பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.
 

199.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.

 

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப்  பயனற்ற
சொற்களைச் சொல்ல மாட்டார்.
 

200.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.

 

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக்
கூடிய சொற்களையே கூற வேண்டும்.