21. தீவினையச்சம் |
201. | தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் |
| தீவினை யென்னுஞ் செருக்கு. |
|
தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள். |
202. | தீயவை தீய பயத்தலால் தீயவை |
| தீயினும் அஞ்சப் படும். |
|
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும். |
203. | அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய |
| செறுவார்க்குஞ் செய்யா விடல். |
|
தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர். |
204. | மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் |
| அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு. |
|
மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும். |
205. | இலனென்று தீயவை செய்யற்க செய்யின் |
| இலனாகும் மற்றும் பெயர்த்து. |
|
வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும். |