பக்கம் எண் :

துறவறவியல்50கலைஞர் உரை

246.

பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி

அல்லவை செய்தொழுகு வார்.

 

அருளற்றவர்களாய்த்      தீமைகளைச்    செய்து      வாழ்பவர்கள்,
பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.
 

247.

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்

கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.

 

பொருள்    இல்லாதவர்களுக்கு   இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது.
அதுபோலவே கருணை  உள்ளம்  இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும்
சிறப்பாக அமையாது.
 

248.

பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.

 

பொருளை   இழந்தவர்  அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை
இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.
 

249.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்.

 

அறிவுத்   தெளிவு   இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக்
கண்டறிய   முடியுமா?   அது  போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும்
அறச்செயலும் இருக்கும்.
 

250.

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேற் செல்லு மிடத்து.

 

தன்னைவிட    மெலிந்தவர்களைத்   துன்புறுத்த   நினைக்கும் போது,
தன்னைவிட    வலியவர்    முன்னால்  அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு
இருப்பதை மறந்துவிடக் கூடாது.