பக்கம் எண் :

திருக்குறள்53அறம்

27. தவம்
 

261.

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற் குரு.

 

எதையும்   தாங்கும்   இதயத்தைப்  பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும்
தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் "தவம்" என்று கூறப்படும்.
 

262.

தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை

அஃதிலார் மேற்கொள் வது.

 

உறுதிப்பாடும்,  மன  அடக்கமும்  உடையவருக்கே தவத்தின் பெருமை
வாய்க்கும். எனவே கட்டுப்பாடான  ஒழுக்கம்   இல்லாதவர்கள்,  தவத்தை
மேற்கொள்வது வீண் செயலேயாகும்.
 

263.

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்

மற்றை யவர்கள் தவம்.

 

துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம்  என்பதற்காகத்  தாங்கள்
கடைப்பிடிக்க  வேண்டிய  தவ   ஒழுக்கத்தை  மற்றவர்கள்  மறந்து விடக்
கூடாது.
 

264.

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்.

 

மன    உறுதியும்   கட்டுப்பாடும்  கொண்டு   தவமென்னும் நோன்பு
வலிமையுடையதாக   அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை
வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.
 

265.

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்.

 

உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய
முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப் படுவதாகும்.