266. | தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் |
| அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. |
|
அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள். |
267. | சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ் |
| சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. |
|
தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள். |
268. | தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய |
| மன்னுயி ரெல்லாந் தொழும். |
|
"தனது உயிர்" என்கிற பற்றும், "தான்" என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும். |
269. | கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின் |
| ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. |
|
எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள். |
270. | இலர்பல ராகிய காரணம் நோற்பார் |
| சிலர்பலர் நோலா தவர். |
|
ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான். |