பக்கம் எண் :

துறவறவியல்54கலைஞர் உரை

266.

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்

அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

 

அடக்கமும்,  அன்பு  நெறியும்,  துன்பங்களைத் தாங்கும் பொறுமையும்
வாய்ந்த   தவம்  மேற்கொண்டவர்கள்   மட்டுமே   தமது   கடமையைச்
செய்பவர்கள்; அதற்கு  மாறானவர்கள்,  ஆசையால்  அலைக்கழிக்கப்பட்டு
வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள்.
 

267.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

 

தம்மைத்  தாமே   வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு
நோற்பவர்களை  எந்தத்  துன்பங்கள்  தாக்கினாலும்  அவர்கள்  சுடச்சுட
ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.
 

268.

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்.

 

"தனது  உயிர்"   என்கிற   பற்றும்,  "தான்"   என்கிற    செருக்கும்
கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.
 

269.

கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

 

எத்தனைத் துன்பங்கள்  வரினும்  தாங்கிக்  குறிக்கோளில்  உறுதியாக
நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.
 

270.

இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.

 

ஆற்றலற்றவர்கள்    பலராக    இருப்பதற்குக்   காரணம், மன உறுதி
கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்.