பக்கம் எண் :

திருக்குறள்55அறம்

28. கூடா ஒழுக்கம்
 

271.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.

 

ஒழுக்க   சீலரைப்  போல்  உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து
அவரது உடலில் கலந்துள்ள  நிலம்,  நீர்,  தீ,  காற்று, வெளி  எனப்படும்
பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.
 

272.

வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்

தானறி குற்றப் படின்.

 

தன் மனத்திற்குக் குற்றம் என்று   தெரிந்தும்கூட  அதைச்  செய்பவர்,
துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.
 

273.

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

 

மனத்தை  அடக்க   முடியாதவர்  துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று
புலித் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.
 

274.

தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

 

புதரில்   மறைந்து  கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப்
பிடிப்பதற்கும்,    தவக்கோலத்தில்    இருப்பவர்கள்  தகாத  செயல்களில்
ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.
 

275.

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்

றேதம் பலவுந் தரும்.

 

எத்தகைய   செயல்  புரிந்துவிட்டோம்  என்று தமக்குத் தாமே வருந்த
வேண்டிய    துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி,  உலகை
ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.