பக்கம் எண் :

துறவறவியல்56கலைஞர் உரை

276.

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணா ரில்.

 

உண்மையிலேயே   மனதாரப்  பற்றுகளைத்  துறக்காமல், துறந்தவரைப்
போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.
 

277.

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

மூக்கிற் கரியா ருடைத்து.

 

வெளித் தோற்றத்துக்குத்  குன்றிமணி  போல்  சிவப்பாக  இருந்தாலும்,
குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம்  படைத்தவர்களும்   உலகில்
உண்டு.
 

278.

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர்.

 

நீருக்குள்   மூழ்கியோர்  தம்மை    மறைத்துக்    கொள்வது  போல,
மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில்
மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.
 

279.

கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன

வினைபடு பாலாற் கொளல்.

 

நேராகத் தோன்றும் அம்பு,  கொலைச்   செயல்    புரியும். வளைந்து
தோன்றும்    யாழ்,   இசை  இன்பம் பயக்கும். அது போலவே மக்களின்
பண்புகளையும்   அவர்களது   செயலால்    மட்டுமே உணர்ந்து கொள்ள
வேண்டும்.
 

280.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்த தொழித்து விடின்.

 

உலகத்தாரின்  பழிப்புக்கு  உள்ளாகும்  செயல்களைத் துறக்காமல் ஒரு
துறவி,   தனது   தலையை    மொட்டையடித்துக்   கொண்டோ, சடாமுடி
வளர்த்துக்    கொண்டோ   கோலத்தை  மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு
ஏமாற்று வித்தையே ஆகும்.