29. கள்ளாமை |
| 281. | எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங் |
| கள்ளாமை காக்கதன் நெஞ்சு. |
| |
எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும். |
| 282. | உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக் |
| கள்ளத்தால் கள்வே மெனல். |
| |
பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும். |
| 283. | களவினா லாகிய ஆக்கம் அளவிறந் |
| தாவது போலக் கெடும். |
| |
கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்துக் கொண்டு போய்விடும். |
| 284. | களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் |
| வீயா விழுமந் தரும். |
| |
களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும். |
| 285. | அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் |
| பொச்சாப்புப் பார்ப்பார்க ணில். |
| |
மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது. |