பக்கம் எண் :

திருக்குறள்57அறம்

29. கள்ளாமை
 

281.

எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

 

எந்தப்   பொருளையும்  களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல்
பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.
 

282.

உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வே மெனல்.

 

பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா  என்று
ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.
 

283.

களவினா லாகிய ஆக்கம் அளவிறந்

தாவது போலக் கெடும்.

 

கொள்ளையடித்துப்    பொருள்   குவிப்பது,   முதலில்    பெரிதாகத்
தோன்றினாலும்,    அந்தச்    செயல்  ஏற்கனவே இருந்த செல்வத்தையும்
அடித்துக் கொண்டு போய்விடும்.
 

284.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமந் தரும்.

 

களவு   செய்வதில்  ஒருவனுக்கு  ஏற்படும் தணியாத தாகம், அதனால்
உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.
 

285.

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.

 

மறந்திருக்கும்   நேரம்    பார்த்துப்   பிறர்   பொருளைக்  களவாட
எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.