பக்கம் எண் :

திருக்குறள்59அறம்

30. வாய்மை
 

291.

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்

தீமை யிலாத சொலல்.

 

பிறருக்கு   எள்முளையளவு   தீமையும்  ஏற்படாத  ஒரு  சொல்லைச்
சொல்வதுதான் வாய்மை எனப்படும்.
 

292.

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்.

 

குற்றமற்ற   நன்மையை   விளைவிக்கக்    கூடுமானால்   பொய்யான
சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.
 

293.

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

 

மனச்சாட்சிக்கு    எதிராகப்    பொய்    சொல்லக்கூடாது;  அப்படிச்
சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.
 

294.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்.

 

மனத்தால்கூடப்    பொய்யை   நினைக்காமல்   வாழ்பவர்கள், மக்கள்
மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.
 

295.

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை.

 

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை    பேசுகிறவர்கள்    தவமும்,
தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.