பக்கம் எண் :

திருக்குறள்61அறம்

31. வெகுளாமை
 

301.

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்

காக்கினென் காவாக்கா லென்.

 

தன்  சினம்  பலிதமாகுமிடத்தில்  சினம்  கொள்ளாமல்  இருப்பவனே
சினங்காப்பவன்;   பலிக்காத   இடத்தில்  சினத்தைக்    காத்தால் என்ன?
காக்காவிட்டால் என்ன?
 

302.

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்லதனின் தீய பிற.

 

வலியோரிடம்   சினம்    கொண்டால்,  அதனால்  கேடு   விளையும்.
மெலியோரிடம்     சினம்    கொண்டாலும்    அதை   விடக்   கேடு
வேறொன்றுமில்லை.
 

303.

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய

பிறத்தல் அதனான் வரும்.

 

யார்மீது   சினம்   கொண்டாலும்    அதை    மறந்துவிட வேண்டும்.
இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.
 

304.

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்

பகையும் உளவோ பிற.

 

சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி  மனமகிழ்ச்சியும்
மறைந்து போய் விடும்.
 

305.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்.

 

ஒருவன்   தன்னைத்தானே   காத்துக்   கொள்ள    வேண்டுமானால்,
சினத்தைக்    கைவிட    வேண்டும்.    இல்லையேல்   சினம்,  அவனை
அழித்துவிடும்.