பக்கம் எண் :

துறவறவியல்62கலைஞர் உரை

306.

சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்.

 

சினங்கொண்டவரை   அழிக்கக்   கூடியதாகச்   சின  மென்னும் தீயே
இருப்பதால்,  அது   அவரை மட்டுமன்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி
போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.
 

307.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

 

நிலத்தைக்  கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது
போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.
 

308.

இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று.

 

தீயினால்  சுட்டெரிப்பது   போன்ற  துன்பங்களை ஒருவன் தொடர்ந்து
செய்தாலும்   அதற்காக    வருந்தி   அவன் உறவு கொள்ள வரும்போது
சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.
 

309.

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி யெனின்.

 

உள்ளத்தால்   சினங்கொள்ளாதவனாக   இருந்தால்   எண்ணியவற்றை
யெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.
 

310.

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை.

 

எல்லையற்ற சினம்  கொள்வார்  இறந்தவர்க்கு  ஒப்பாவார்.  சினத்தை
அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.