பக்கம் எண் :

துறவறவியல்68கலைஞர் உரை

336.

நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை யுடைத்திவ் வுலகு.

 

இந்த  உலகமானது,  நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல்
செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகக்  கொண்டதாகும்.
 

337.

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப

கோடியு மல்ல பல.

 

ஒரு   பொழுதுகூட   வாழ்க்கையைப்  பற்றிய உண்மையைச் சிந்தித்து
அறியாதவர்களே,    ஆசைக்கோர்     அளவின்றி    மனக்கோட்டைகள்
கட்டுவார்கள்.
 

338.

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே

உடம்போ டுயிரிடை நட்பு.

 

உடலுக்கும்   உயிருக்கும்   உள்ள    உறவு   முட்டைக்கும் பறவைக்
குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
 

339.

உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

 

நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது
பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.
 

340.

புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சி லிருந்த உயிர்க்கு.

 

உடலுடன்  தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம்
கிடையாது.