பக்கம் எண் :

துறவறவியல்72கலைஞர் உரை

356.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி.

 

துறவற   வாழ்வுக்குத்  தகுதியுடையவராகச்  செய்திடும் அனைத்தையும்
கற்று,   உண்மைப்   பொருள்  உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும்
இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்.
 

357.

ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

 

உண்மையை   ஆராய்ந்து  உறுதியாக  உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு
உண்டு எனக் கருத மாட்டார்கள்.
 

358.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்

செம்பொருள் காண்ப தறிவு.

 

அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித்  தெளிந்த
உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்.
 

359.

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய்.

 

துன்பங்கள்    நம்மைச்    சாராமல்    இருக்க     வேண்டுமானால்,
அத்துன்பங்களுக்குக்   காரணமானவற்றை  உணர்ந்து  அவற்றின் மீதுள்ள
பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்.
 

360.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமங் கெடக்கெடு நோய்.

 

விருப்பு,   வெறுப்பு,   அறியாமை  இவற்றுக்கு  இடம்  தராதவர்களை
நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.